சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

அமெரிக்க ஜனநாயகம் - என் பார்வையில்

இந்த புஷ்/கெர்ரி மோதலில் எனக்கு தனிப்பட்ட விதத்தில் பெரிய ஆர்வமோ தேர்வோ ஒரு இந்திய மாநிலத் தேர்தல் அளவுக்குக் கூட இல்லை. என் இடதுசாரி மனதின் ஓரத்தில் கெர்ரி ஜெயிக்கட்டும் (உண்மையில் 'புஷ் தோற்கட்டும்') என்று விருப்பம் முளைவிட்டாலும், அதைக் கண்டுகொள்ளாமல், 'யாராயிருந்தாலும் ஒண்ணுதான்' என்றுதான் எண்ணினேன். (அருள்செல்வன் அழகாக ஒரு கார்ட்டூன் போட்டிருக்கிறார்)

ஆனாலும், இந்தத் தேர்தலின் போது இங்கே அமெரிக்காவில் குடியிருப்பதால், என் இந்திய மனம் இந்தத் தேர்தல் சூழலை, நிகழ்வுகளை, இந்திய சூழலோடு, நிகழ்வுகளோடு சம்பந்தப்படுத்தி, பக்கம்-பக்கம் வைத்துப் பார்ப்பதைத் தடுக்க முடியவில்லை. அந்தப் பார்வையில் எனக்குத் தோணியதை எந்த வரிசையிலும் இல்லாமல் தொகுக்கிறேன். தேர்தல் முறை:
நம் தேர்தல்களில் ஒரு பெரிய தலைவரின் தனிப்பட்ட ஆளுமை, பிரபலம் காரணமாக அவர் கட்சிக்கு மக்கள் ஓட்டுப் போடத் தயாராக இருந்தாலும் அவருக்கு நேரடியாகப் போட முடியாது. அந்த ஓட்டை ஒரு பாராளுமன்ற/சட்டமன்ற வேட்பாளருக்கு போட்டுத்தான் செயல்படுத்த முடியும். இதனால் 'தலைவருக்கு விசுவாசமாக இருப்பது' என்கிற ஒற்றைத் தகுதியோடு ஒண்ணுக்கும் ஆகாத ஆளுக்கெல்லாம் போடுவோம். அப்போது சொல்வார்கள், 'அமெரிக்கமுறை மாதிரி வரவேணும், அங்கெல்லாம் தலைவரை நேரடியாக மக்களே தேர்ந்தெடுப்பாங்க', என்று. அது முழுக்க உண்மையில்லை என்பது இப்ப புரியுது. இந்த முறையாவது புஷ் நேரடி 'பாபுலர்' ஓட்டிலும் ஜெயித்தார். போனமுறை அதில் தோற்றும் தலைவரானார். எனவே இந்த முறையிலும் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. ஆனாலும் கொஞ்சம் பரவாயில்லை.

விகிதாசார பிரதிநிதித்துவம்:
இதை கலைஞர் 13 வருஷமா எதிர்கட்சியில் இருக்கும் வரை கத்தி கத்தி சொன்னதில் 'ஆமா, இதுதானே சரியான முறை' என்று தோணியது. அவர் ஆளுங்கட்சியானபோது சவுகரியமாக இதை மறந்துவிட்டார். அடுத்த தேர்தலில் தோற்றபின் கையிலெடுப்பார். போனதேர்தலில் தோற்றபின் அம்மாகூட பிபிசி பேட்டியில் இது இல்லாததால் தான் தன் தோல்வி பூதாகரமானது என்று சொன்னபோது, சக்கரம் ஒரு சுற்று முழுதாக வந்துவிட்டதாகத் தோணியது. அடுத்த தேர்தலில் இதை வைத்து யார் சப்பைக்கட்டுக் கட்டுவார்கள் பார்க்கலாம். இங்கேயும் பல மாநிலங்கள் தங்கள் மொத்த எலக்டொரல் காலேஜ் இடங்களையும் ஒரே கட்சிக்கு கொடுப்பது அதே அடிப்படையில் சரியில்லாத அணுகுமுறையாகத் தோணியது. ஐரோப்பாவில் பல நாடுகளில் இது இருக்காம். இங்க இல்லை போல.

மக்களின் கருத்தொற்றுமை:
இது ஒண்ணு மட்டும் நம் ஊரில் பளீரென்று வித்தியாசமாகத் தெரியும். அதாவது நம் ஊரில் சாய்ந்தால் ஒரே பக்கமாக சாய்வார்கள். இந்த மாதிரி கத்தி முனையில் 51:49 எல்லாம் எனக்குத் தெரிந்து இல்லை. ஒரு சில தொகுதிகளில் இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலம் முழுமையாகப் பார்த்தால் தெளிவாக இருக்கும். குறைந்த பட்சம் ஒரு பிராந்திய அளவிலாவது தெளிவான தேர்வு இருக்கும். இங்கே தொடர்ந்து இப்படி கிட்டக்கிட்ட வரும் மாதிரி மக்கள் அணி சேருவது (பிரிவது?) ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இப்படி கிடுக்கிப் பிடி பெரும்பான்மையில் ஒரு சோகம், வெற்றி மறுக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட பாதி இருப்பதுதான். பார்க்க பாவமாக இருக்கிறது. ஏன் இப்படி?
  • ஒருவர் தன் அபிப்ராயங்களை ஓரளவுக்கு சுதந்திரமாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அடுத்தவரைத் தன் பக்கம் இழுப்பதிலும், தான் அடுத்தவர் சொல் கேட்டு சாய்வதிலும் இவர்களின் நம் 'கூட்டத்தோடு கோயிந்தா' கொள்கையிலிருந்து வேறுபடுகிறார்கள்.
  • இரு கட்சிகள்/தலைவர்களுமே தங்கள் எதிரியை நன்றாகப் புரிந்து, தங்களை செதுக்கிக்கொண்டு இந்த இடைவெளியைக் குறைக்கிறார்கள். நம் ஊரில் 'இது தேறாது' என்று ஊருக்கே தெரிந்தும் தான் சொல்வதுதான் சரி என்று மார்தட்டி மண்ணைக் கவ்வும் தலைவர்களைவிட இவர்கள் புத்திசாலிகள்.
  • மதம், மொழி, ஜாதி, பொருளாதார நிலை போன்ற, எதுவெல்லாம் மக்களை சுலபத்தில் அணிசேர்க்கப் பயன்படுமோ, அதிலெல்லாம் பெரிய தலை போகிற பிரச்னைகள் இல்லாததால் இருக்கும் சுவாரசியமற்ற(உணர்ச்சிவசப்படுத்தமுடியாத) பிரச்னைகளால் ஓரளவுக்கு மேல் இடைவெளிவர வாய்ப்பில்லை.


ஆகவேதான், divided, fractured என்று அடைமொழியுடன் இந்திய, ஐரோப்பிய ஊடகங்கள் இவர்களை வரித்து தங்கள் ஆசையைத் தீர்த்துக்கொண்டாலும், அப்படி ஒன்றும் இந்தத் தேசம் ஒற்றுமையில்லாத தேசம் அல்ல என்று தோணுவது. நம் மாநிலங்களுக்குள் இருக்கும் டிவிஷனும் ஃப்ராக்ச்சரும் இதுமாதிரி 100 மடங்கு இருக்கும். இதெல்லாம் சும்மா.

தேர்தல் நாள்:
இந்தியாவில் உள்ளது போல தேர்தல் சமயத்தில் வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் இல்லை. ஒருவர் ஓட்டுப் போட வரும்போதுகூடத் தன் பெயரைப் பதிந்துகொள்ளலாம் (இந்த 'பதிந்து' என்ற வினைச்சொல் இங்கே தான் வரும், வலைப்பதிவர்கள் செய்வது பதித்தல், பதிதல் அல்ல. 'நான் பலநாள் பதிக்க முடியாமல் போய் இன்றைக்கு இதைப் பதிக்கிறேன்' ;). என்னமோ ஒரு பஞ்ச் கார்டு முறையில் ஓட்டுப் போடுகிறார்களாம். ஆனாலும் இந்தியப் பொறியாளர்கள் உருவாக்கிய எந்திரங்களைவிட மிகவும் சிக்கலான கருவிகள் என்கிறார்கள். 'அது மாதிரி எளிமையாக ஏன் சிந்திக்கக்கூடாது?' என்று கூட யாரோ எழுதியதாகப் படித்தேன். மனிதர்ளோடு புழங்கும் எதையும் இந்தியக் கண்ணோடு வடிவமைக்க/மாற்றியமைக்க வேண்டிய தேவையை அலசிய பின்னரே அந்நியத் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. இந்த செய்திகள் அதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகத் தோணுகிறது.
நம் தேர்தலன்று ஓட்டுப் போட வருபவர்களுக்கு வாகனத்தில் சவாரி கொடுத்தால் அது பெரிய குற்றம் (என்று காகிதத்தில் இருக்கு;)) இங்கே நேற்று டிவியிலேயே விளம்பரம் வந்தது, 'யாருக்கெல்லாம் சவாரி வேணுமோ, அவர்கள் இங்கே போன் செய்தால் கூட்டிப் போகிறோம்' என்று! இரண்டு கட்சிக்காரர்களும் போன் எண் கொடுத்திருந்தார்கள். நாம் ஏன் இதில் இன்னும் பொய் வேடம் போடணும்? இன்னும் இந்தியாவிலும் சவாரிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பயமுறுத்தல்:
இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களை ஒரு அளவுக்கு மேல் பயமுறுத்தமுடியாது. இருப்பவர்களை? எக்கசக்கமாய் பயமுறுத்தலாம். இவர்களிடம் வேகும் ஒரே பருப்பு அதுதான். அதனால்தான் ஊரை அடித்து உலையில் போட்டுக்கொண்டு, (இதுக்கு என்னை அடிக்க ஒருத்தர் வரலாம், அவர் ஏன் 'என்னை' மாதிரியே அடிக்கிறார்னு இன்னொருத்தர் ஆவி பெயரில் வந்து அடிக்கலாம்:D) 'ஊரான் அடிக்க வரான்' என்று பம்மாத்துக் காட்டி 'புலிக்குப் பயந்தவங்க எல்லாம் என் மேல படுத்துக்குங்க'ன்னு ஜெயிப்பது. 'அமைதிப்படை'யில் சத்யராஜ் மூலமாக மணிவண்ணன் பளிச்சுன்னு புரியவெச்ச விஷயம்தான். மக்களுக்கு தங்கள் பாதுகாப்பு மேலேயே சந்தேகம் வர வைத்துவிட்டால் மற்றதைப் பற்றி சிந்திக்க நேரம்? அதையும் மீறி சிந்திக்கறவங்களை மடக்க அடுத்த ஆயுதம் 'நான் ஒரு கடவுளுக்கு-அடங்கின-பிள்ளை' என்ற கெட்டப். இது இரண்டையும் அங்கே ஒருத்தர் கரெக்டாப் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் தன் ஆட்சியின் சாதனையாக ஒரு கண்கெட்டுப்போன கிரிமினலை கட்டிப்போட்டு சுட்டதைச் சொல்லிக்கொள்வதும் சாமிக்கு பயப்படுவதாகக் காட்டிக்கொள்வதும். என்ன, அங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் அதிகம், அதனால் ஒரு அளவுக்கு மேல் இதெல்லாம் வேகாது. ரேஷன் கடையில் சந்தன சோப் விற்றாலொழிய:D மக்கள், 'வீரப்பன் கிடக்கான், என் அப்பனுக்கு என்ன வழி?' என்றுதான் கேட்பார்கள்.

அவுட்சோர்சிங்:
'இருவரும் நேர் எதிர்; ஒருத்தர் வந்தா இந்தியாபூராவும் ராத்திரி சாப்பாட்டுக்கு பீட்சாவும் கோக்கும் (அந்தக் 'கோக்'கை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதாக வந்த செய்தியெல்லாம், தி.நகர் வெள்ளரிக்காய் வியாபாரியோடு சேர்த்துப் பார்க்கவேண்டிய கதைகள்) கிடைக்கும்' என்பது உடான்ஸ். அடுத்தவர் வந்தா 'இங்க இருக்கும் கிரீன்கார்டர்களே இந்தியாவில் வேலை தேட வேண்டி இருக்கும்' என்பது இன்னொரு சாஃப்ட் பயமுறுத்தல். அவுட்சோர்சிங் அமெரிக்க முதலாளிகளுக்குத் தேவைப்படும் வரை நடந்துகொண்டுதான் இருக்கும், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் சரி. அதே போல நம்மை விட இன்னொருத்தன், அவன் பிலிப்பைன்ஸ்காரனோ பிரேசில்காரனோ, விலை குறைவாய் செய்தானென்றால் அங்கே கடையை நகர்த்திவிடுவார்கள். இது காற்றுள்ள போது தூற்றும் வியாபாரம்தானே ஒழிய இதை வைத்து நூற்றாண்டுத் திட்டங்கள் போட முடியும் என்று நான் நம்பவில்லை. நூற்றாண்டுகளுக்குப் பின் (உலகம் இருக்கும்?) 'இதன் மூலம் நாம் இழந்தது பெற்றதைவிட அதிகம்' என்று பின்னாளில் எவராவது நிரூபித்தாலும் நான் ஆவியுருவில் வந்து கைதட்ட மாட்டேன்.

ஆக்ஸிஸ் ஆஃப் ஈவில்:
சோவியத் யூனியன் கை இறங்கிய பின் அமெரிக்காவின் கை மேலேலேலே போய்க்கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. இன்னும் பல நாடுகளில் கைவைப்பார்கள், விடுவிப்பார்கள், சுதந்திரம் அளிப்பார்கள், பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு போவோம். முடிந்தால் நமக்குப் பிடிக்காத ஆளைக் கைகாமிப்போம்:D அவ்வளவுதான்! வல்லான் வகுத்ததே...

இன்னும் என்னென்னமோ தோணியது, எல்லாம் சிதறிப்போச்.
காசி - clock 06:00:00 - வியாழன், 04.11.04 - பொது - 1280x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search அமெரிக்க ஜனநாயகம் என் பார்வையில்

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

மேல்Kind பேச்சுல சொன்னது:

ஏதோ அமெரிக்க தேர்தல் புண்ணியத்தில் ஜென்னா புஷ், பார்பரா புஷ், வானெஸ்ஸா கெர்ரி, அலெக்ஸாண்ட்ரா கெர்ரி, கேட் எட்வர்ட்ஸ் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டோம். அம்புட்டுத்தான் நாங்க பார்த்தது!

வியாழன், 04.11.04, 07:44:48 Mahesh சொன்னது:

Pls check..http://www.thatstamil.com/n...

வியாழன், 04.11.04, 09:50:35 Kasi சொன்னது:

அன்பு மஹேஷ்,

நான் காலையிலேயே ஒரு ஆங்கிலத் தளத்தில் பார்த்தேன். இன்னும் விபரமான செய்தி வெளியிட்டிருக்கலாம். :( தளம் எதிலாவது நிறுவி, சோதனை ஓட்டம் காணவிரும்புபவர்களுக்கு வசதி செய்து, மேலும் பயன்களை, செயல்படும் அடைப்படையை விளக்கி... ஹும். வீரப்பன் செய்திகளை முழநீளம் எழுதுகிறார்கள், இதை ஏன் விளக்கமாக சொல்லமாட்டேன் என்கிறார்கள்? தலைமைச் செயலக செய்திக்குறிப்பு போல இருக்கிறது. முழுவிபரத்துக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றி,
-காசி

வியாழன், 04.11.04, 10:03:58 Montresor சொன்னது:

தொலைக்காட்சித் தாக்குதல்கள் பற்றிச் சொல்ல மறந்துவிட்டீர்களே! நம் ஊரிலும் தொலைக்காட்சி விளம்பரங்களை அனுமதித்தால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எக்கச்சக்கப் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், விளம்பரங்களுக்குச் செலவழிப்பதைவிட ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகச் சேனல் தொடங்கவேண்டியிருக்குமென்று நினைக்கிறேன்!

வியாழன், 04.11.04, 11:54:23 Mahesh சொன்னது:

காசி,

நன்றி..! அண்ணா பல்கலைக் கழக ஆர்வலர்கள் அதை (கழுகு) காசுக்கு விற்க முனையலாம். இதுதான் தமிழ்நாட்டில் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் வழி. இணையத்தில் இலவசமாக என்னென்ன கிடைக்கிறது, எப்படி பயன்படுத்துகிறார்கள், தமிழ் எவ்வளவுதூரம் பரவியுள்ளது என்றெல்லாம் யோசிக்காமல் இது மாதிரி ஏதாவது
செய்வார்கள். வேண்டுமெனில் பாருங்கள் - அடுத்த வார தமிழ் - செய்தித்தாள், வார
இதழ்களில் இதைப்பாராட்டி செய்தி வரும். அல்லது தொலைக்காட்சியில் காண்பிப்பர்.

உம். என்னத்த சொல்றது..

நன்றி,
மகேஷ்
PS: For displaying thamiz 'ha' how to type in this converter ? 'ha' results in 'ka'

வியாழன், 04.11.04, 22:58:09 Meenaks சொன்னது:

மஹேஷ், “ha”க்கு முன்னால் ஒரு “-” போடுவதன் மூலம் அதை ஹ ஆக்கி விடலாம்.

வெள்ளி, 05.11.04, 00:18:06 அன்பு சொன்னது:

இதுமாதிரி ஒன்று பார்த்தேன்... இதுதான் கழுகா என்று தெரியவில்லை:
http://www.au-kbc.org/resea...

வெள்ளி, 05.11.04, 01:03:01 Kasi சொன்னது:

மஹேஷ்,
//அண்ணா பல்கலைக் கழக ஆர்வலர்கள் அதை (கழுகு) காசுக்கு விற்க முனையலாம். இதுதான் தமிழ்நாட்டில் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் வழி. இணையத்தில் இலவசமாக என்னென்ன கிடைக்கிறது, எப்படி பயன்படுத்துகிறார்கள், தமிழ் எவ்வளவுதூரம் பரவியுள்ளது என்றெல்லாம் யோசிக்காமல் இது மாதிரி ஏதாவது செய்வார்கள்.//

அரிய கண்டுபிடிப்புகளையோ, பல மனித-ஆண்டுகள் உழைப்பையோ இலவசமாக அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. மேலும் அண்ணா பல்கலை. போன்ற நிறுவனங்கள் தாங்கள் ஆராய்ச்சியிலிருந்து பொருளீட்டமுடிந்தால் அதை வரவேற்கவேண்டும். ஓரளவுக்கு மானியங்களை எதிர்பாராமல் இவை தானாக தங்களை தாங்கிக்கொள்ள முயலவேண்டும் என்பதால் இது அந்த நோக்கில் சரியானதே.

நான் சொல்வது, காப்புரிமை அவர்களிடத்தே இருப்பினும், மற்றவர்களுக்கு இயக்கிக்காட்ட ஒரு தளத்தில் நிறுவி, அதன் சிறப்பியல்புகளை விளக்கி சொல்லலாமே என்றுதான்.

செய்வார்கள் என்றே எதிர்பார்க்கிறேன்.

சனி, 06.11.04, 16:03:09 Mahesh சொன்னது:

நன்றி மீனாக்ஸ், மற்றும் காசி.

ஹி ஹி (அட அருமை!)

மஹேஷ்

திங்கள், 08.11.04, 05:47:42 Alex Pandian சொன்னது:

காசி,

அருந்ததி ராயின் ஒரு அருமையான பேச்சு - நேற்றைய ஹிண்டுவில். அமெரிக்க
அரசியல் மற்றும் கார்போரேட்டுகளின் ஆட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.
மிக நீண்ட கட்டுரை - நேரம் கிடைப்பின் வாசிக்கவும்.

the text of ARUNDHATI ROY's acceptance speech of the Sydney Peace Prize
http://www.hindu.com/mag/20...

- அலெக்ஸ் பாண்டியன்

திங்கள், 08.11.04, 05:53:59

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it